விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் விஜயதரணி காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியிலிருந்து மூன்று முறை சட்டப்பேரவைக்குத் தேர்வான விஜயதரணி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் தில்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், மத்திய அரசினுடைய திட்டங்கள் சில தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுவதில்லை என்று தோன்றுவதாகவும் கூறினார். இவருடைய வருகை கட்சியைப் பலப்படுத்தும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
விஜயதரணியைத் தகுதி நீக்கம் செய்வது குறித்து சட்டப்பேரவைத் தலைவரிடம் காங்கிரஸ் முறையிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனிப்பட்ட காரணங்களினால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் கட்சி சார்ந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு விஜயதரணி கடிதம் அனுப்பினார்.