தேர்தலுக்குப் பிறகு திமுகவிலும், அரசிலும் மாற்றம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

"இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் வீடு வீடாகச் செல்லும் பரப்புரை பிப்ரவரி 26-ல் தொடக்கம்.
தேர்தலுக்குப் பிறகு திமுகவிலும், அரசிலும் மாற்றம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
படம்: https://twitter.com/arivalayam

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு திமுகவிலும், அரசிலும் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. காணொளி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் அழைப்பு விடுத்தார்.

இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

"உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்து பிரமித்தேன்.

அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு, எல்.ஈ.டி. திரைகளுடன் பிரம்மாண்ட கூட்டங்களாக இருந்தன. மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கூட்ட புகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது.

இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கூட்டங்கள் பரவலாக மாநிலம் முழுவதும் கழகத்தினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும்.

நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும். இவை அனைத்தையும் இப்போது நாம் தீர்மானமாகப் போட உள்ளோம்" என்றார்.

மேலும், "இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் வீடு வீடாகச் செல்லும் பரப்புரை பிப்ரவரி 26 முதல் தொடங்கவுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு திமுகவிலும், அரசிலும் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in