தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னத்தை அரசு வெளியிட்டுள்ளது.
2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்கிறார். நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னத்தை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டது. தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி என்ற வாசகம் இதில் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
"திமுக அரசு எல்லோர்க்கும் எல்லாம் என்ற இலக்கினை எளிதில் எய்திடும் வண்ணம் இன்று நான்காம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
தமிழ்நாடு அரசின் 2024-25-ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை "தடைகளைத் தாண்டி" எனும் தலைப்பில் பேரவையில் பெருமிதத்துடன் அளிக்கப்படுவதைக் குறிக்கும் சின்னமாக நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
"யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே" எனும் பழமொழிக்கேற்ப ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்துச் சின்னமாக இது விளங்கிடும் என்பது திண்ணம்."