முதல்வர் கொண்டுவந்த தனித் தீர்மானங்கள் நிறைவேற்றம்

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தொகுதி மறுசீரமைப்பு குறித்த தீர்மானத்தைக் கருத்தில் எடுத்துக்கொள்வதாகப் பேசினார்.
முதல்வர் கொண்டுவந்த தனித் தீர்மானங்கள் நிறைவேற்றம்

தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டங்களுக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்த இரு தனித் தீர்மானங்கள் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

2026-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும், அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதாலும் இந்த நடைமுறையை நாம் எதிர்க்க வேண்டும் என்று ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிரான தனித் தீர்மானத்தையும் முதல்வர் முன்மொழிந்தார்.

முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானம் 1:

2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும் தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

மக்கள் நலன் கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களையும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும் இந்தப் பேரவை வலியுறுத்துகிறது.

முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானம் 2:

ஒரு நாடு ஒரு தேர்தல்' என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும்; நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும்; அது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என்பதாலும்; இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பரந்து விரிந்த நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும்; அதிகாரப் பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு அது எதிரானது என்பதாலும் 'ஒரு நாடு ஒரு தேர்தல்' திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது.

இந்த இரு தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது. திமுக தோழமைக் கட்சிகள் தீர்மானத்துக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவு செய்தார்கள். பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தொகுதி மறுசீரமைப்பு குறித்த தீர்மானத்தைக் கருத்தில் எடுத்துக்கொள்வதாகப் பேசினார். விவாதத்துக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் இரு தனித் தீர்மானங்களும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in