இயற்கை வேறு முடிவை எடுக்க வைத்தால்..: நடிகர் விஷால் அறிக்கை

பல்வேறு குளறுபடிகளைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடவில்லை.
இயற்கை வேறு முடிவை எடுக்க வைத்தால்..: நடிகர் விஷால் அறிக்கை
படம்: https://twitter.com/VishalKOfficial

வரும் காலத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவை எடுக்க வைத்தால், அப்போது மக்களின் ஒருவனாகக் குரல் கொடுக்கத் தயங்க மாட்டேன் என நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்குவதாக கடந்த 2-ம் தேதி அறிவித்தார். இவரைத் தொடர்ந்து, நடிகர் விஷால் அரசியல் குறித்த அறிவிப்பை இன்று வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் மக்களின் ஒருவனாகக் குரல் கொடுக்கத் தயங்க மாட்டேன் என விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், "இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு" என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் 'தேவி அறக்கட்டளை' மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளையும் என் மக்கள் நல இயக்கும் மூலம் செய்து வருகிறேன்.

நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, "நன்றி மறப்பது நன்றன்று" என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துகொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.

தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்."

2016-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கு 2017-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் அப்போது வேட்புமனுத் தாக்கல் செய்தார். விஷால் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்மொழிந்து 10 நபர்கள் வேட்புமனுவில் கையெழுத்திட்டிருந்தார்கள். இதில் இருவர் தாங்கள் கையெழுத்திடவில்லை என்று தெரிவிக்க, விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதன்பிறகு, தனது கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் வேட்புமனுவை ஏற்றுக்கொண்டதாக விஷால் அறிவித்தார். சிறிது நேரத்திலேயே தேர்தல் அலுவலர் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்துவிட்டார். பல்வேறு குளறுபடிகளைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in