பாஜகவின் கதவுகள் அதிமுகவுக்கு மட்டுமல்லாமல், அனைத்துக் கட்சிகளுக்குமே திறக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தினத்தந்திக்கு சிறப்புப் பேட்டியளித்தார். இந்தப் பேட்டியில், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றாகிவிட்டதால், 3-வது அணி அமைக்கத் திட்டமா என்கிற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமித் ஷா, கூட்டணிக்கான அனைத்துக் கதவுகளும் திறந்தே இருப்பதாகப் பதிலளித்தார்.
அமித் ஷாவின் கருத்து குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், "எங்களுடைய நிலைப்பாட்டைப் பொறுத்தவரை பாஜகவுக்கான கதவுகள் மூடப்பட்டது. அவர்கள் திறந்து வைத்திருக்கலாம். பாஜக வரக்கூடாது என்பதற்காக நாங்கள் கதவை மூடிவிட்டோம்" என்றார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவின் கருத்தைப் பார்க்கவில்லை என்று கூறி கேள்வியைத் தவிர்த்துவிட்டார்.
இதனிடையே, தில்லியிலுள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியினுடைய தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"பிரதமரின் கரத்தை வலுப்படுத்துவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களுக்கு பாஜகவின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்பதுதான் அமித் ஷாவின் கருத்து. நாங்களும் இதையே சொல்கிறோம். யாரும் யாரையும் கட்டாயப்படுத்தப்போவதில்லை. திமுக கூட்டணியிலிருந்துகூட யார் வேண்டுமானாலும் வரலாம். அனைவருக்கும் பாஜகவின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன" என்றார் அண்ணாமலை.