கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு?: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்
சென்னை மெட்ரோ ரயிலில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகப் பயணி ஒருவர் விமர்சனம் செய்ததற்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் தந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில், மெட்ரோ ரயில் பயணி ஒருவர், "கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது. மெட்ரோ ரயிலில் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சட்டத்துக்குப் புறம்பானது" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இவரது எக்ஸ் தளப் பதிவின் கீழ் விளக்கம் கொடுத்துள்ளது.
"அவர்கள் சென்னை சென்ட்ரலிலிருந்து நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் வரை பயணித்தார்கள். அவர்களிடம் கூர்மையான கட்டுமானப் பொருள்கள் இருந்ததால், பாதுகாப்பு வழிகாட்டுதலுக்கு உள்பட்டு அந்தப் பொருள்கள் சரியாக மறைக்கப்பட்டபிறகு அனுமதிக்கப்பட்டார்கள்" என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் தந்துள்ளது.