2024-25-ம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை பிப்ரவரி 12-ம் தேதிக்கு கூட்டியுள்ளார். நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இந்தக் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து, பிப்ரவரி 20-ல் 2024-25-ம் நிதியாண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையும், பிப்ரவரி 21-ல் 2023-24-ம் நிதியாண்டுக்கான முன்பண செலவு மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது."