மக்களவைத் தேர்தலில் மாநில, தேசிய நலன்கள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக பாமக சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து அந்தக் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ராணி மெய்யம்மை அரங்கில் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தீர்மானம் செய்யப்பட்டது. மேலும், கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு அளிக்கப்படுவதாகவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பாமகவால் 7 இடங்கள் வரை வெல்ல முடியும். ஆனால், கூட்டணி இல்லாமல் போட்டியிடுவதற்கு இது உகந்த நேரம் அல்ல. இந்த மக்களவைத் தேர்தலில் 10 இடங்களில் பாமக வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார்.