உத்தரப் பிரதேசம் அயோத்தி ராமர் கோயிலுக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார். தரிசனத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ராமர் கோயில் குறித்த கேள்விக்குப் பதிலளித்தார்.
"அயோத்தி ராமர் கோயில் அனைவருக்கும் பொதுவானது. யார் வேண்டுமானாலும் அங்கு சென்று இறைவனைப் பிரார்த்தனை செய்யலாம். அதில் எந்த முரண்பாடும் கிடையாது" என்றார்.
தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக ஏற்கெனவே குழுக்களை அமைத்துள்ளது. அந்தக் குழுக்கள் தங்களது பணியைத் தொடங்கிவிட்டன. நேற்றுகூட குழுக்களின் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நான்கு குழுக்களும் இன்று முதல் தனித்தனியாக பணிகளை மேற்கொள்ளத் தொடங்குவார்கள்" என்றார்.
ராமர் கோயில் குறித்து கடந்த 24-ம் தேதி சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கோயில் கட்டியதால் மக்கள் அனைவரும் அவர்களது (பாஜக) பக்கம் செல்வார்கள் என்பது தவறான கருத்து" என்றார்.