அதிமுகவை தான் குறை கூறவில்லை என்றும் தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும் பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் இராம ஶ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார். எனினும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப நிலைமை மாறுமா என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.
இந்த நிலையில், அதிமுக எங்களுடன் கூட்டணிக்கு வரவில்லையென்றால், பெரிய விலை கொடுக்க நேரிடும் என இராம ஶ்ரீநிவாசன் ஜூனியர் விகடனுக்குப் பேட்டியளித்தார். இந்தக் கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் விளக்கம் தந்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"நான் ஜூனியர் விகடனில் தந்த பேட்டி பலராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. எந்த இடத்திலும் நான் அண்ணா திமுகவை குறை சொல்லியதில்லை சில அரசியல் எதார்த்தங்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது என்பதாகத்தான் எனது கருத்து இருந்தது. தொடர்ந்து ஊடகங்களில் அண்ணா திமுக கூட்டணி வேண்டும் என்றும் அவர்கள் எங்கள் கொள்கை கூட்டாளிகள் என்றும் பேசி வருபவன் நான். இது போன்ற சர்ச்சைகளுக்கு எனது இந்த பதிவின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்."