பாஜக ஆட்சிக்கு வந்தால் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பல்லடத்தில் தனியார் செய்தி நிறுவனத்தினுடைய செய்தியாளர் சரமாரியாகத் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"பத்திரிகையாளர்களுக்கு அரசு எவ்விதப் பாதுகாப்பையும் அளிப்பதில்லை. குறிப்பாக, பல்லடத்தில் நிகழ்ந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, கண்டிக்கத்தக்கது. மத்திய அமைச்சர் எல். முருகன் செய்தியாளரை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து வந்துள்ளார். மாநில அரசு சமாளிப்பதற்காகக் காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கிறது. அவர்கள் கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் செய்தியாளருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க வேண்டியது.
பத்திரிகையாளர்கள் நல வாரியம் தேவை என்பதுதான் பத்திரிகையாளர்களின் கோரிக்கையாக உள்ளது. தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருந்து பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கலாம். அனைத்து நேரங்களிலிலும் பணியில் இருக்கிறீர்கள், அபாயம் என்றாலும் உடனடியாக சம்பவ இடத்துக்குச் செல்கிறீர்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால், பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். பத்திரிகையாளர்களை நாங்கள் முன்களப் பணியாளர்களாகப் பார்க்கிறோம். இவர்களுக்குப் பத்திரிகையாளர் மீது அக்கறை இல்லை."