இளையராஜா இசையில் பவதாரிணி பாடி, தனது கவிதையில் வெளிவராத 'அம்மாவின் வாசனை' என்கிற பாடலை திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ளார்.
இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று (வியாழக்கிழமை) காலமானார். இலங்கையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். அவரது உடல் இன்று சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது. பவதாரிணியின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலர் இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பவதாரிணி பாடி வெளிவராத பாடலை திமுக எம்.பி. கனிமொழி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது:
"'அம்மாவின் வாசனை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை, இசைஞானி இளையராஜா அவர்கள் பாடலாக இசையமைத்தார்கள். பவதாரணி அவர்களின் அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது. அவர் பாடிய பிறகு அந்த கவிதை முழுமை பெற்றது. இதுவரை வெளியிடப்படாத அந்தப் பாடலை, அவர் நினைவாக இங்குப் பகிர்கிறேன்."