குடியரசு நாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கொடுக்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கவுள்ளது.
குடியரசு நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இதில் முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியலமைப்புக்கு எதிராகவும், கூட்டாட்சி முறைக்கு எதிராகவும் செயல்படுவதாகக் கூறி திமுகவின் தோழமைக் கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. காங்கிரஸ் கட்சியும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அந்தக் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டார்.
கடந்தாண்டு திமுகவினுடைய தோழமைக் கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்தபோதிலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் அதில் கலந்துகொண்டார். இந்த முறை முதல்வர் தேநீர் விருந்தில் பங்கேற்பது குறித்த தகவல்கள் உறுதிசெய்யப்படவில்லை. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, மா. சுப்பிரமணியன் ஆகியோர் தமிழக அரசு சார்பாக தேநீர் விருந்தில் பங்கேற்கிறார்கள்.
இந்த நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கிறது.