பிரதமர் மோடி சென்னைக்கு நாளை வருகை தருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை அவர் துவக்கி வைக்கிறார்.
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023, தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் வரும் ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற உள்ளன. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் பிரதமரின் மோடியின் வருகையையொட்டி சென்னைக் காவல்துறை, ஆயுதப்படை, கமாண்டோ, சிறப்புக் காவல் படை 22,000 பேர் கொண்ட ஐந்து அடுக்குப் பாதுகாப்புப் படை பிரதமருக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளது. இத்தகவலை சென்னைக் காவல்துறை தெரிவித்துள்ளது.