மசூதியை இடித்துவிட்டுக் கட்டியதால் ராமர் கோயில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜன. 22 அன்று நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் அவரவர் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனவரி 22 அன்று ராமர் கோயிலுக்கு தொடர்ந்து பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சேலத்தில் வரும் 21 அன்று இளைஞர் அணி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தச் சுடர் அடுத்த இரு நாள்களுக்கு 310 கி.மி. தூரத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராமல் கோயில் விழா குறித்துக் கூறியதாவது:
எந்த மதத்துக்கும் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் கிடையாது எனக் கலைஞர் கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் வருவது எங்களுக்குப் பிரச்னை கிடையாது. ஆனால் அங்குள்ள மசூதியை இடித்துவிட்டுக் கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றாக்க வேண்டாம் என நம்முடைய பொருளாளர் ஏற்கெனவே கூறியுள்ளார் என்றார்.