ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாள்களாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அலங்காநல்லூரில் தற்போது நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் சிராவயலில் புகழ்பெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள், படிப்புக்கேற்ற அரசுப் பணியை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.
இந்த நிலையில், மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளதாவது:
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" எனும் கூற்றுக்கு ஏற்ப உலகை வழிநடத்தும் உழவுத் தொழில் செய்யும் உழவர் பெருமக்களுக்கும், அந்த உழவுக்கு துணை நிற்கும் மாடுகளுக்கும் இந்த உழவர் திருநாளில் எனது நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன்,
ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆன இந்த விடியா திமுக அரசு தமிழகத்தின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்."