சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயுவின் விலை ரூ. 100 குறைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அறிவிப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:
"மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் எரிவாயுவின் விலை ரூ. 100 குறைக்கப்படுவதாக அரசு முடிவெடுத்துள்ளது. நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான குடும்பங்களின் சுமையைக் குறைப்பது மட்டுமின்றி, குறிப்பாக பெண்களுக்கு இது பயனளிக்கும்.
சமையல் எரிவாயுவை மிகவும் குறைந்த விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வுக்கு உதவியாக இருப்பதோடு, ஆரோக்கியமான சூழல் நிலவுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். பெண்களுக்கு அதிகாரமளிப்பது மற்றும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்வதற்கான எங்களுடைய உறுதிபாட்டுக்கு ஏற்பவும் இது அமைகிறது."
இதுதவிர மகளிர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து மற்றொரு பதிவையும் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
"சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்! பெண்களின் வலிமை, துணிச்சல் மற்றும் உறுதித்தன்மைக்கு தலைவணங்குகிறோம். வெவ்வேறு துறைகளில் அவர்கள் அடைந்த சாதனைகளுக்குப் பாராட்டுகள். கல்வி, தொழில்முனைவு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு துறைகளில் எடுக்கப்பட்டுள்ள முன்னெடுப்புகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் எங்களுடைய அரசு உறுதி கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளின் சாதனைகளில் இது வெளிப்பட்டுள்ளது" என்றார் பிரதமர் மோடி.