ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தகவல் கொடுத்தால், ரூ. 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வரும் ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். குண்டுவெடிப்பு தொடர்புடைய வழக்கு என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தொப்பி அணிந்து ராமேஸ்வரம் கஃபேவுக்கு வந்த நபர் தேடப்பட்டு வருகிறார். வரும்போது பையுடன் வந்த இவர், ராமேஸ்வரம் கஃபேயில் பையை வைத்துச் சென்றுள்ளார். இதிலிருந்துதான் வெடிகுண்டு வெடித்துள்ளது. இவர் கஃபேவுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய தொப்பி அணிந்திருக்கும் நபரைக் கைது செய்வதற்கு ஏதுவாக எந்தத் தகவலைக் கொடுத்தாலும் ரூ. 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது. தகவல் கொடுக்கும் நபரின் அடையாளம் ரகசியம் காக்கப்படும் என்றும் என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.