தேர்தல் பத்திர விவரங்களைத் தேர்தலுக்கு முன்பு வெளியிடுவதில் என்ன தயக்கம்?: ராகுல் காந்தி

தேர்தல் பத்திரங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் வேண்டும் என எஸ்பிஐ உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
ராகுல் காந்தி (கோப்புப்படம்)ANI
1 min read

தேர்தல் பத்திர விவரங்களைத் தேர்தலுக்கு முன்பு வெளியிடுவதில் எஸ்பிஐ-க்கு என்ன தயக்கம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு நிதி, நன்கொடை அளிக்கும் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், கட்சிப் பெயரில் நன்கொடை வழங்கும் நபர்களின் அடையாளம், விவரங்கள் பதிவு செய்யப்படாத வகையில் வருமான வரி மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களையும் ரத்து செய்தது. மேலும், அனைத்துத் தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய தகவல்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறும், தேர்தல் ஆணையம் மார்ச் 13-ல் அதிகாரப்பூர்வ தளத்தில் அவற்றை வெளியிடலாம் என்றும் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் வேண்டும் என எஸ்பிஐ உச்ச நீதிமன்றத்தில் நேற்று முறையிட்டது.

இதுதொடர்பாக, எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மோடியின் உண்மை முகத்தை மறைப்பதற்கான கடைசி முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதிவு:

"நன்கொடைத் தொழிலை மறைக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் நரேந்திர மோடி மேற்கொண்டிருக்கிறார். தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய உண்மையை நாட்டு மக்கள் தெரிந்துகொள்வது அவர்களது உரிமை என உச்ச நீதிமன்றம் கூறிய பிறகு, இந்தத் தகவல்களைத் தேர்தலுக்கு முன்பு வெளியிடுவதில் எஸ்பிஐ-க்கு என்ன தயக்கம்?

ஒரு 'க்ளிக்' மூலம் பெறக்கூடிய தகவல்களைச் சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் கோருவது ஐயத்தை உண்டாக்குகிறது.

நாட்டிலுள்ள ஒவ்வொரு சுயாதீன அமைப்பும், மோதானி (மோடி மற்றும் அதானி) குடும்பத்தின் அங்கமாக மாறி, அவர்களது ஊழலை மறைக்க முயற்சிக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பு, மோடியின் உண்மையான முகத்தை மறைப்பதற்கான கடைசி முயற்சி இது."

logo
Kizhakku News
kizhakkunews.in