ஹிமாச்சலப் பிரதேசத்தில் 18 முதல் 60 வயது வரையிலான அனைத்துப் பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ. 1,500 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு திங்கள்கிழமை அறிவித்தார்.
இந்தத் திட்டம் குறித்து முதல்வர் கூறியதாவது:
"பெண்களின் பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டை உயர்த்துவதற்கு இந்த உதவித்தொகை உதவும். முதற்கட்டமாக பிப்ரவரி 1 முதல் லஹால் மற்றும் ஸ்பிடி மாவட்டப் பெண்களுக்கு ரூ. 1,500 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 5 லட்சம் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள். இதற்காக ஆண்டுதோறும் ரூ. 800 கோடி செலவிடப்படும்" என்றார் அவர்.
இந்த அறிவிப்பின் மூலம் 5-வது தேர்தல் உத்தரவாதத்தை மாநில அரசு நிறைவேற்றியுள்ளதாக ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் அலுவலகம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தில்லியில் 18 வயதைக் கடந்த அனைத்துப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படும் என தில்லியில் நேற்று நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது அறிவிக்கப்பட்டது.