குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பை காங்கிரஸ் தலைமை நிராகரித்தது மக்களின் உணர்வுகளைப் பாதித்ததாகக் கூறி அர்ஜுன் மோத்வாடியா கட்சியிலிருந்து விலகினார். சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் இவர் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் சி.ஆர். பாட்டீல் முன்னிலையில் அவர் இன்று பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்த பிறகு அவர் பேசியதாவது:
"சர்தார் வல்லபாய் படேல் மற்றும் காந்தியைப்போன்ற ஒரு தலைவரை இந்த நாடு மோடியின் வடிவில் பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அங்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. இந்தச் சூழலில் வளர்ந்த இந்தியா எனும் மோடியின் கனவை நிறைவேற்றுவதற்காகவே பாஜகவில் இணைந்துள்ளேன். இரட்டிப்புப் பலத்துடன் உழைக்க நான் தயார்.
காங்கிரஸிலிருந்து விலகியபோது, அரசு அமைப்புகளிடமிருந்து எனக்கு அழுத்தம் இருந்ததாக சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. என் மீது இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டதில்லை. பேராசை, அழுத்தம் என்ற பேச்சுக்கெல்லாம் இங்கு இடமே இல்லை" என்றார் அவர்.