மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக கட்சி நிதிக்கு ரூ. 2,000 வழங்கியுள்ளார். மேலும், தேசத்தைக் கட்டியெழுப்ப நன்கொடை அளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
எக்ஸ் தளத்தில் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், "வளர்ந்த பாரதத்தை உருவாக்க ஒவ்வொரு நபரின் ஆதரவும் முக்கியமானது. மோடி ஜி தலைமையின் கீழ், பாரதத்தை வளர்ந்த நாடாக மாற்ற பாஜக செயல்பட்டு வருகிறது. நாம் அனைவரும் தோளோடு தோள் நின்று, நமோ செயலியைப் பயன்படுத்தி #DonationForNationBuilding என்பதை நாடு தழுவிய பிரசாரமாக மாற்றுவோம்” என்றார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக கட்சி நிதிக்கு ரூ.2,000 நன்கொடை அளித்தார்.
’தேர்தல் பத்திரங்கள்’ திட்டமானது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் ஒருமனதாக தீர்ப்பளித்த பின்னர், பணத்தை நன்கொடையாக வழங்குவதற்கான இந்த அழைப்பு வந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கட்சிகள் வரவேற்றாலும், தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மைக்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதாக ஆளும் பாஜக கூறியது.