ராமேஸ்வரம் கஃபே மார்ச் 8 முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, அதன் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ராகவேந்திர ராவ் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள ராமேஸ்வரம் கஃபேயில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பு நாட்டை உலுக்கியது. இதில் 10 பேர் காயமடைந்தார்கள். இதுதொடர்பாக, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த ராகவேந்திர ராவ் கூறியதாவது:
"இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இந்தியாவிலேயே எங்கும் நடக்காமல் இருப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நாங்கள் துணை நிற்கிறோம். ஒரு பெண் கண்களை இழந்துவிட்டார். அவருடனும் நாங்கள் துணை நிற்கிறோம். எங்களுடைய ஊழியர்கள் 4, 5 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். அவர்களுக்கும் நாங்கள் ஆதரவாகவே உள்ளோம்.
இளைஞர்களின் வலிமையைக் காட்ட, இந்தியர்களாகிய நாம் யாருக்கும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்க உங்கள் அனைவரது ஆசியும் தேவை. வெள்ளிக்கிழமை முதல் நாங்கள் மீண்டும் செயல்படவுள்ளோம். உங்கள் அனைவரது ஆதரவும் எங்களுக்குத் தேவை" என்றார் அவர்.