மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"அதிமுக இன்னும் கூட்டணியை உருவாக்கவில்லை. பாஜக கூட்டணிக்கு ஆட்களைத் தேடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எதிர்க்கட்சி கூட்டணிகள் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலைமை உள்ளது.
திமுக கூட்டணியில் நாங்கள் 4 தொகுதிகளைக் கேட்டுள்ளோம். இதில் 3 தனித் தொகுதி மற்றும் 1 பொது தொகுதி. 8, 10 கட்சிகள் உள்ள கூட்டணியில் அவ்வளவு தொகுதிகளைப் பெற முடியாது என்பதையும் நாங்கள் அறிவோம். சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம்.
சிதம்பரத்தைப் பொறுத்தவரை அது என்னுடைய சொந்தத் தொகுதி. அந்தத் தொகுதியில்தான் போட்டியிட முடியும். இதில் எந்தக் குழப்பமும் இல்லை" என்றார்.
திமுக, விசிக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியலை திமுகவிடம் விசிக கொடுத்துள்ளது.