உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏவும் மூத்த தலைவருமான மனோஜ் குமார் பாண்டே கட்சியின் தலைமை கொறடா பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன், உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் போக்குவரத்து அமைச்சர் தயாசங்கர் சிங்கை சந்திக்கச் சென்றார்.
சமாஜ்வாதி எம்.எல்.ஏ.வுடனான சந்திப்புக்குப் பிறகு, போக்குவரத்து அமைச்சர் தயாசங்கர் சிங், "பிரதமர் மோடியின் கொள்கைகளாலும் நாட்டில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்களாலும் ஈர்க்கப்பட்ட பல அரசியல்வாதிகள் பாஜகவில் இணைகின்றனர். மனோஜ் பாண்டே, எப்போதும் சனாதன தர்மத்தின் ஆதரவாளர். அதனால்தான் அவர் சமாஜ்வாதி கட்சியில் மகிழ்ச்சியாக இல்லை" என்றார்.
தற்போது உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்கள் அவைக்கான தேர்தல் நடந்துவருகிறது. சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ ராகேஷ் பிரதாப் சிங், "நான் யார் மீதும் கோபப்படவில்லை, உள் ஆத்மாவின் குரலுக்கு ஏற்ப வாக்களிப்பேன்... " என்று கூறியுள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த எட்டு வேட்பாளர்களும் வெல்வார்கள் என்றும் மாற்றுக் கட்சி வாக்குகளும் தங்களுக்குக் கிடைக்கும் என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறினார்.