ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் 4 விண்வெளி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.
இந்திய விமானப் படை விமானிகள் குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் 2024-25-ம் ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்கிறார்கள். இவர்கள் நால்வரும் ரஷியாவிலுள்ள யூரி ககாரின் காஸ்மோனட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார்கள்.
கேரளத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ககன்யான் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
"விண்வெளித் துறையில் இந்தியாவின் வெற்றி, நாட்டின் இளம் தலைமுறையினரிடையே அறிவியல் மனப்பான்மையின் விதைகளை விதைக்கிறது. பொருளாதாரத்தில் இந்தியா உலகளவில் 3-வது இடத்தை அடையும் நேரத்தில், ககன்யான் திட்டம் நமது விண்வெளித் துறையைப் புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்லவுள்ளது" என்றார் பிரதமர் மோடி.
இந்தியா முதன்முறையாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிறது. இந்தத் திட்டத்துக்காக நாட்டிலுள்ள பல்வேறு இஸ்ரோ மையங்களில் பணிகள் விரிவாக நடைபெற்று வருகின்றன.