தாய்லாந்து துணைப் பிரதமர் பர்ன்ப்ரீ பஹிதா-நுகாரா திங்கட்கிழமை அதிகாலை தில்லி வந்தார். அவர், அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
தில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் நாளை நடைபெறவுள்ள பத்தாவது இந்தியா - தாய்லாந்து கூட்டு ஆணையக்குழுக் கூட்டத்திற்கு அவர் இணைத் தலைமை தாங்குவார். வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "தாய்லாந்து துணைப் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பர்ன்ப்ரீ பஹிதா-நுகாரா தனது முதல் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பத்தாவது கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்குவார்” என்று பதிவிட்டுள்ளார்.
நுகாரா தனது நான்கு நாள் அரசு முறைப் பயணத்தை இன்று தொடங்குகிறார். நாளை, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கரை சந்திக்க உள்ளார். நான்கு நாள் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு பிப்ரவரி 28ம் தேதி அவர் இந்தியாவில் இருந்து புறப்படுகிறார். 9-வது இந்தியா-தாய்லாந்து கூட்டு ஆணையக் கூட்டம் ஆகஸ்ட் 17, 2022 அன்று பாங்காக்கில் நடைபெற்றது.
ஆகஸ்ட் 16-18, 2022-ல் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தாய்லாந்தின் அப்போதைய துணைப் பிரதமர் டான் பிரமுத்வினாயுடன் இந்தியா-தாய்லாந்து கூட்டு ஆணையத்தின் (JCM) ஒன்பதாவது கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்க பாங்காக் சென்றார். பிப்ரவரி 8 அன்று, செனட்டர் பிகுல்கியூ கிரைரிக்ஷ் தலைமையிலான தாய்லாந்து தூதுக்குழு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தது. இந்த சந்திப்பின் போது, பிர்லா தூதுக்குழுவினருக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் இந்திய அரசியலமைப்பின் நூலை வழங்கினார்.
தாய்லாந்து நாடாளுமன்ற தூதுக்குழு, இந்திய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து, தாய்லாந்து இந்தியாவில் சில திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவதாக வலியுறுத்தியது. இந்தியாவில் தாய்லாந்து பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட்ட விருந்தோம்பலுக்கு க்ரைரிக்ஷ் பாராட்டு தெரிவித்தார்.