2024-25 நிதியாண்டில் பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகப் புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஆண்டில் பயணிகள் வாகன விற்பனை 6-8 சதவீதமாக உயரும் என்று கிரைசில் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்களுக்கான தேவையும் ஏற்றுமதியும் மந்தமாக இருந்தாலும், ஸ்போர்ட் யுடிலிட்டி வாகனங்கள் (எஸ்யூவி) அதிகமாக விற்பனை ஆகும் என்பதால் இந்த உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.
நுகர்வோர் விருப்பத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் எஸ்யூவிகளுக்கான தேவையை அதிகரித்துள்ளது. கோவிட் கொடுந்தொற்றுக்குமுன் 2019 நிதியாண்டில் மொத்த உற்பத்தியில் 28 சதவீதமாக இருந்த எஸ்யூவி விற்பனை, இந்த நிதியாண்டில் 60 சதவீதமாக ஆகியுள்ளது.
"அடுத்த நிதியாண்டில் ஒட்டுமொத்த கார்களின் எண்ணிக்கை 5-7 சதவீதம் அதிகரிக்கும். அதேவேளை, எஸ்யூவிகளுக்கான தேவை 12 சதவீதத்திற்கும் மேலாக அதிகரிக்கும்" என்று கிரைசிலின் மூத்த இயக்குநர் அனுஜ் சேத்தி கூறினார். இதற்கு நேர்மாறாக, மலிவு விலை கார்களுக்கான தேவை இந்த நிதியாண்டிலும் குறைவாகவே காணப்படுகிறது.