சிறுமி பலாத்கார வழக்கு: முன்னாள் அரசு அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
போக்சோ வழக்கில் பிரமோதே காக்கா மற்றும் அவர் மனைவிக்கு ஜாமீன் வழங்க தில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவர்களுடைய முந்தைய ஜாமீன் மனுக்கள் விசாரணை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தன. பிரமோதே காகாவும் அவரது மனைவியும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட காகா, தனது நண்பரின் மைனர் மகளைப் பல மாதங்களாகப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தி கர்ப்பமாக்கியதாகவும், காகாவின் மனைவி சிறுமியை மிரட்டிக் கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரையும் தில்லி போலீசார் ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர்.
இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பாலியல் பலாத்காரம், துன்புறுத்தல், கிரிமினல் மிரட்டல், கிரிமினல் சதி, காயம் ஏற்படுத்துதல், அனுமதியின்றி கருச்சிதைவு செய்தல் ஆகிய பிரிவுகளின்கீழும் போக்சோ சட்டத்தின்கீழும் தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. தில்லி அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் துணை இயக்குநராக இருந்த காகா, பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இருவருக்கும் எதிராக தில்லி காவல்துறை அக்டோபர் 11, 2023 அன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. நவம்பர் 9, 2023 அன்று தீஸ் ஹசாரி நீதிமன்றம் இந்தக் குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர். அவை முதலில் கீழமை நீதிமன்றத்திலும் தற்போது தில்லி உயர்நீதி மன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.