மத்திய அரசு அறிமுகப்படுத்திய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
காலனிய ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதீனியம் ஆகிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டிசம்பர் 25-ல் இந்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார். இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898 மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1872 ஆகியவற்றுக்கு மாற்றாக இந்தச் சட்டங்கள் அமையவுள்ளன.
புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதாவில் 9 புதிய குற்றங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 33 குற்றங்களுக்கு சிறைத் தண்டனைக் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளன. 23 குற்றங்களுக்குக் குறைந்தபட்ச தண்டனை கட்டாயம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 83 குற்றங்களுக்கு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவில் 531 பிரிவுகள் உள்ளன. இதுவே குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898-ல் 484 பிரிவுகள் மட்டுமே இருந்தன.