கடைசி மனிதனுடைய வாழ்வையும் மாற்றுவதுதான் மோடியின் உத்தரவாதம்: பிரதமர் மோடி

"வளர்ந்த இந்தியாவை அடைவதற்கான சிறந்த காலம் இது."
குஜராத்தில் பிரதமர் மோடி
குஜராத்தில் பிரதமர் மோடிANI

சமூகத்தின் கடைசி மனிதனுடைய வாழ்வை மாற்றுவதுதான் மோடியின் உத்தரவாதம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

"சமூகத்தின் கடைசி மனிதனுடைய வாழ்வை மாற்றுவதுதான் மோடியின் உத்தரவாதம். இதனால்தான், நாட்டில் ஒருபுறம் கோயில்கள் கட்டப்படுகின்றன. மறுபுறம் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வீடுகள் கட்டப்படுகின்றன. அனைவருக்குமான வளர்ச்சி என்கிற தாரக மந்திரத்துடன் நாடு இயங்கி வருகிறது.

புதிய இந்தியாவில் இன்று மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளும், எதிர்கால தலைமுறையினருக்கான ஒரு மரபை உருவாக்குகிறது. புதிய நவீன சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் வளர்ந்த இந்தியாவுக்கான பாதை.

சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு ஜனவரி 22-ல் அயோத்தியில் ராமரின் காலடியில் இருந்தேன். அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்கை கடவுள் ராம் லல்லாவின் சிலை பிரதிஷ்டையில் கலந்துகொள்வதற்கான பாக்கியத்தைப் பெற்றேன். இதன்பிறகு, பிப்ரவரி 14-ல் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் ஹிந்துக் கோயிலைத் திறந்து வைப்பதற்கான வாய்ப்பைப் பெற்றேன்.

2-3 நாள்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தில் கல்கி தாமுக்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பைப் பெற்றேன். இன்று தராபில் இங்கு இந்த பிரமாண்ட கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை வழிபடுவதற்கான பாக்கியத்தைப் பெற்றுள்ளேன்.

வளர்ந்த இந்தியாவை அடைவதற்கான சிறந்த காலம் இது. ஒருபுறம் கடவுளுக்கான சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன. நாட்டுக்கான சேவைகளும் செய்யப்பட்டு வருகின்றன. இரண்டும் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in