பழங்குடியினர் பட்டியலில் மெய்தி வகுப்பினரை சேர்ப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்ச் 2023-ல் பிறப்பித்த உத்தரவிலிருந்து ஒரு பத்தியை நீக்க மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் நிலைப்பாட்டுக்கு முரணாக இருப்பதாகக் கூறி மணிப்பூர் உயர் நீதிமன்றம் அந்தப் பத்தியை நீக்க உத்தரவிட்டுள்ளது.
பழங்குடியினர் பட்டியலில் மெய்தி வகுப்பினரைச் சேர்ப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என மணிப்பூர் உயர் நீதிமன்றம் கடந்தாண்டு மார்ச் 27-ல் அறிவுறுத்தியது. மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுதான், அந்த மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறையை மேலும் தீவிரப்படுத்தியதாக நம்பப்பட்டு வருகிறது. இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளாதக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இதுதொடர்புடைய சீராய்வு மனுவை விசாரித்த மணிப்பூர் உயர் நீதிமன்றம், கடந்த மார்ச்சில் பிறப்பித்த உத்தரவிலிருந்து ஒரு பத்தியை மட்டுமே நீக்குவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதன்மூலம், "மெய்தி வகுப்பினரை பழங்குடியினருக்கான பட்டியலில் சேர்ப்பது தொடர்புடைய மனுதாரர்களின் கோரிக்கையை, உத்தரவைப் பெற்றதிலிருந்து 4 வார காலத்துக்குள் அரசு பரிசீலனை செய்ய வேண்டும்" என்ற பத்தி உயர் நீதிமன்றத்தின் உத்தரவிலிருந்து நீக்கப்படுகிறது.