சட்ட ஆலோசனைக்குப் பிறகு அமலாக்கத் துறை அழைப்பாணைக்குப் பதில்: ஆம் ஆத்மி

"சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்துக்குப் பழி தீர்க்கவே அமலாக்கத் துறை இன்று அழைப்பாணை அனுப்பியுள்ளது."
சட்ட ஆலோசனைக்குப் பிறகு அமலாக்கத் துறை அழைப்பாணைக்குப் பதில்: ஆம் ஆத்மி
ANI

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 7-வது முறையாக அழைப்பாணை அனுப்பியுள்ள நிலையில், சட்ட ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் பதிலளிப்பார் என ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 5 முறை அழைப்பாணை அனுப்பியது. அரவிந்த் கெஜ்ரிவால் 5 முறையும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த அழைப்பாணை சட்டத்துக்குப் புறம்பானது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறி வந்தார்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பாக அமலாக்கத் துறை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட்டது. வழக்கு விசாரணையில், பிப்ரவரி 17-ல் காணொளி வாயிலாக நேரில் ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவால், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதாலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதாலும் நேரில் ஆஜராக முடியவில்லை என்று முதல்வர் கெஜ்ரிவால் அவகாசம் கோரினார். இதையடுத்து, மார்ச் 16-ல் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தில் முறையிட்டபோதிலும், பிப்ரவரி 19-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை 6-வது முறையாக அழைப்பாணை அனுப்பியது. இந்த நிலையில், பிப்ரவரி 26-ல் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை 7-வது முறையாக அவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக, தில்லி அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், "சட்ட ஆலோசனைக்குப் பிறகு அமலாக்கத் துறை அனுப்பிய இன்றைய அழைப்பாணைக்கு சட்ட ஆலோசனைக்குப் பிறகு பதிலளிப்போம் என்றார். தில்லி அமைச்சர் சௌரப் பரத்வாஜ் கூறுகையில், "ஆம் ஆத்மி தொடர்புடையதில் அரசியல் தலையீடு இருப்பது அனைவராலும் புரிந்துகொள்ள முடிகிறது. சண்டிகர் மேயர் தேர்தலில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த அன்றைய தினம் இரவு அமலாக்கத் துறை அழைப்பாணையைப் பிறப்பிக்கிறது." என்றார்.

தில்லி அமைச்சர் அடிஷி கூறுகையில், " மேலும் ஒரு சட்டவிரோத அழைப்பாணையை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது. அமலாக்கத் துறை இதுவரை அனுப்பியுள்ள சட்டவிரோத அழைப்பாணைகள் அனைத்துக்கும் நாங்கள் இதுவரை சட்டப்பூர்வ கேள்வியை எழுப்பியுள்ளோம். அமலாக்கத் துறையிடமிருந்து ஒரு பதில்கூட இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இது சட்டப்பூர்வ நடவடிக்கை கிடையாது. அரவிந்த் கெஜ்ரிவாலையும், ஆம் ஆத்மியையும் அச்சுறுத்துவதற்கான செயல். சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்துக்குப் பழி தீர்க்கவே அமலாக்கத் துறை இன்று அழைப்பாணை அனுப்பியுள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in