மத்திய உள்துறை அமைச்சகத்தினால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் ஆளும் சிபிஐஎம் கட்சி தொடர்பு வைத்திருப்பதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம் சாட்டியிருக்கிறார். கருப்புக்கொடி போராட்டத்தில் இறங்கிய மாணவர் அமைப்புகளை கைது செய்ய ஆளுங்கட்சி தயங்குவதாக தர்ணாவில் இறங்கிய ஆளுநர், இம்முறை ஆளுங்கட்சியினர் மீது நேரடியாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்திய மாணவர் கூட்டமைப்பு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகளோடு ஆளும் சிபிஐஎம் கட்சியினர் தொடர்பு வைத்திருப்பதாக பேசியுள்ள ஆளுநர், முதல்வர் பினராயி விஜயனின் நிர்வாகம், பகல் நேரங்களில் இந்திய மாணவர் கூட்டமைப்புக்காகவும், இரவு நேரங்களில் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்காகவும் பணியாற்றுவதாகவும் அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
"என்னிடம் நேரடியான ஆதாரம் இல்லை என்றாலும் மக்கள் மத்தியில் பேசப்படும் விஷயத்தை வெளிப்படையாக பகிர்ந்த கொள்கிறேன். மத்திய அரசின் அமைப்புகளும் இத்தகைய செய்திகளை உறுதிப்படுத்துகின்றன. எனக்கெதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் யாரென்பது அரசுக்கு தெரியும். கைது செய்யப்பட்டவர்களில் பாதிப் பேர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தொண்டர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிதல்ல, அவர்கள் மாணவர்களே அல்ல. ஆளுங்கட்சியால் அழைத்து வரப்பட்டவர்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பு ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது. அதை எதிர்த்து தர்ணாவில் இறங்கிய ஆளுநர், அனைத்து போராட்டக்காரர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று பேசியிருந்தார். தனக்கு எதிராக அரசு திட்டமிட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவதாகவும், எதிர்ப்பை கண்டு தான் அஞ்சப்போவதில்லை என்றும் தொடர்ந்து பேசி வருகிறார்.