ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, வாரிசு அரசியல் குறித்து விமர்சித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி கல்வி, ரயில்வே, விமானப் போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறையில் ரூ. 32 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்தார். மேலும், ஜம்முவில் இருந்தபடியே நாடு முழுவதிலும் ரூ. 13,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து, ஜம்முவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
"ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகளாக வாரிசு அரசியல் சுமையை சுமக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு உங்களுடைய நலனைக் காட்டிலும் குடும்ப நலன்கள் தான் முக்கியம். உங்களுடைய குடும்பத்தினரும், இளைஞர்களும் இதனால் நிறைய பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருந்தது. பாஜக அரசுதான் அதை நீக்கியது. ஜம்மு-காஷ்மீர் தற்போது ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதுதான் இதற்குக் காரணம். எனவே, பாஜகவை 370 இடங்களில் வெற்றி பெறச் செய்யுங்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியை 400 இடங்களில் வெற்றி பெறச் செய்யுங்கள்.
உங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. வளர்ந்த ஜம்மு-காஷ்மீரை நாம் உருவாக்குவோம். உங்களுடைய 70 ஆண்டுகால கனவுகள் வரும் ஆண்டுகளில் மோடியால் நிறைவேற்றப்படும். முன்பு குண்டுவெடிப்பு, கடத்தல் மற்றும் பிரிவினை குறித்த செய்திகள்தான் ஜம்மு-காஷ்மீரிலிருந்து வரும். ஆனால், தற்போது ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியடைந்து முன்னோக்கி நகர்ந்து வருகிறது" என்றார் பிரதமர்.