தில்லியில் நடைபெற்ற பாஜக தேசிய மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
தில்லியில் பாஜகவின் தேசிய மாநாடு இருநாள்கள் நடைபெற்றது. கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இந்த மாநாட்டை சனிக்கிழமை தொடக்கி வைத்தார். இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் இன்று உரையாற்றினார்கள்.
பிரதமர் மோடி கூறியதாவது:
"அடுத்த 100 நாள்களில் ஒவ்வொரு வாக்காளர்களையும், ஒவ்வொரு பயனாளர்களையும், ஒவ்வொரு வகுப்பினைரையும் நாம் ஒவ்வொருவரும் சென்றடைய வேண்டும்.
நாம் அனைவரது நம்பிக்கையையும் ஆதரவையும் பெற வேண்டும். நமது உண்மையான தொண்டர்கள் வருடம் முழுக்க 24 மணி நேரமும் தொண்டர்களுடன் உள்ளார்கள். அவர்களுக்கான பணிகள் எதையாவது செய்து அவர்களது நம்பிக்கையைப் பெற்று வருகிறார்கள்.
எனினும், அடுத்த 100 நாள்கள் நாம் புதிய உத்வேகத்துடன் இன்னும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். இன்று, பிப்ரவரி 18. இன்று 18 வயதை அடையும் இளைஞர்கள் இன்னும் சில நாள்களில் 18-வது மக்களவையைத் தேர்ந்தெடுக்கவுள்ளார்கள்.
நாட்டின் கனவுகள், உறுதித்தன்மையும் விரிவடைந்துவிட்டது. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது நமது கனவாகவும் இலக்காகவும் இருக்க வேண்டும். இந்தியாவை அந்த இடத்துக்கு அழைத்துச் செல்வதில் அடுத்த 5 ஆண்டுகள் நமக்கு மிகமிக முக்கியம்.
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்ல வேண்டுமெனில், பாஜக 370-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்ற வேண்டும்" என்றார் பிரதமர் மோடி.