ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் மாலை 5.35 மணிக்கு சரியாக விண்ணில் செலுத்தப்பட்டது.
வானிலை மாறுபாடுகள் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோவால் ஏற்கெனவே விண்ணில் செலுத்தப்பட்டு, செயல்பாட்டிலுள்ள இன்சாட் - 3டி மற்றும் இன்சாட் - 3 டிஆர் செயற்கைக்கோள்களின் தொடர்ச்சியாக இன்சாட் - 3டிஎஸ் விண்ணில் செலுத்தப்படுகிறது. வானிலை மாறுபாடுகள், நிலப்பரப்பு, பெருங்கடல் உள்ளிட்டவற்றைக் கண்காணித்து, ஆய்வு செய்து தகவல்களை அனுப்பவுள்ளது. இதில் 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், பேரிடர் எச்சரிக்கைகளை முன்கூட்டியே பெற முடியும்.
ஜிஎஸ்எல்விஎஃப் 14 மூலம் இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான 27.30 மணி நேர கவுன்ட்டவும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.05 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக, ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையிலுள்ள செங்கலம்மா கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழிபட்டார்.