அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்புடைய வழக்கில், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 16-ல் நீதிமன்றத்துக்கு வர ரௌஸ் அவென்யூ நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 5 முறை அழைப்பாணைகளை அனுப்பியது. தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பாணைகள் சட்டத்துக்குப் புறம்பானது என்று கூறி புறக்கணித்து வந்தார்.
கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பாக அமலாக்கத் துறை தில்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் பிப்ரவரி 17-ம் தேதி நீதிமன்றம் முன்பு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனிடையே, பிப்ரவரி 19-ம் தேதி விசாரணை ஆஜராகுமாறு அமலாக்கத் துறை 6-வது முறையாக அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று காணொளி வாயிலாக ஆஜரானார். அப்போது, தில்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு மீது விவாதம் நடைபெறவுள்ளதாலும் தன்னால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக முடியவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமலாக்கத் துறை தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தில்லி சட்டப்பேரவையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெட்டுபைக் கோரியுள்ளார். இந்தத் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது.
தில்லி சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில் 62 பேர் ஆம் ஆத்மி உறுப்பினர்கள். மீதமுள்ள 8 பேர் பாஜக உறுப்பினர்கள். பட்ஜெட் கூட்டத்தொடரின்போது துணைநிலை ஆளுநரின் உரையின்போது குறுக்கிட்டதாகக் கூறி மொத்தமுள்ள 8 பாஜக உறுப்பினர்களில் 7 பேர் பட்ஜெட் கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.