வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராக எல். முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
எல். முருகன், மாயா நரோல்யா, பன்சிலால் குர்ஜார் மற்றும் உமேஷ் நாத் மஹராய் ஆகியோர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிடுகிறார்கள். மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் ஒடிஸாவிலிருந்து போட்டியிடுகிறார். இவருக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
வரும் ஏப்ரல், மே மாதங்களில் மன்மோகன் சிங், ஜெ.பி. நட்டா உள்பட மொத்தம் 58 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஓய்வு பெறுகிறார்கள். இதில் 28 எம்.பி.க்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸிலிருந்து 11 எம்.பி.க்கள், திரிணமூல் காங்கிரஸிலிருந்து 4 எம்.பி.க்கள், பாரத் ராஷ்ட்ர சமிதியிலிருந்து 4 எம்.பி.க்கள், பிஜு ஜனதா தளத்திலிருந்து 2 எம்.பி.க்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து தலா 2 எம்.பி.க்கள், ஒய்எஸ்ஆர்சிபி, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் சிக்கிம் ஜனநாயகக் கட்சியிலிருந்து தலா ஒரு எம்.பி.க்கள் ஓய்வு பெறுகிறார்கள்.
மாநிலங்களவையில் பாஜக 93 உறுப்பினர்களையும், காங்கிரஸ் 30 உறுப்பினர்களையும், திரிணமூல் காங்கிரஸ் 13 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.