நாடாளுமன்றத்தில் கடந்த 2019 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தில்லியில் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் நிகழ்ச்சியொன்றில் அமித் ஷா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிஏஏ குறித்து அமித் ஷா உரையாற்றினார்.
"குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒரு சட்டம். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு இந்தச் சட்டம் அமல்படுத்தப்படும். இது தொடர்பாக எந்தக் குழப்பமும் கூடாது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் காங்கிரஸ் அரசின் வாக்குறுதி. அகதிகள் இந்தியாவில் வரவேற்கப்பட்டு அவர்களுக்கு இந்தியக் குடியரிமை வழங்கப்படும் என அறிவித்த காங்கிரஸ் இன்று பின்வாங்குகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் நோக்கம் குடியரிமையை வழங்குவதற்குதானே தவிர, யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல. குடியுரிமைப் பறிப்பதற்கு சட்டத்தில் எந்த அம்சமும் வழிவகுக்கவில்லை. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் பாதிக்கப்படும் அகதிகளுக்குக் குடியுரிமையை வழங்குவதற்காக தான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" என்றார் அமித் ஷா.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இருந்தபோதிலும், இந்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.