உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்
உத்தரகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றும் முதல் மாநிலம் உத்தரகண்ட்.
உத்தரகண்டில் 2022-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இந்தத் தேர்தலுக்கான வாக்குறுதியாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக தெரிவித்தது. இதன் அடிப்படையில் பொது சிவில் சட்டத்துக்கான மசோதாவை முதல்வர் புஷ்கர் சிங் தாமி சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவின் மீது உரையாற்றிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "உரிய நேரத்தில் பொது சிவில் சட்டத்தை மாநிலங்கள் இயற்றிக்கொள்ளலாம் என அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 44-ன் கீழ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம் என அனைத்து அம்சங்களிலும் எவ்விதப் பாகுபாடின்றி அனைவருக்கும் சம உரிமையை வழங்குகிறது. சகோதரிகள் மற்றும் பெண் குழந்தைகள் மீது காட்டப்படும் பாகுபாடுகள் நிறுத்தப்பட வேண்டும்" என்றார்.
இதன்பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டதைக் கொண்டாடும் விதமாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.