மத்தியப் பிரதேசம் ஹர்தா மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இந்த வெடிவிபத்தின் தாக்கம் 15 கி.மீ. சுற்றுவட்டாரத்துக்கு உணரப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வெடிவிபத்து காலை 11.30 மணியளவில் நிகழ்ந்தது. வெடிவிபத்தின் கடுமையான சப்தம் காரணமாக மக்கள் அலறியடித்து ஓடியுள்ளார்கள். விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் கடுமையாகப் போராடி வருகிறார்கள். தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகே, சம்பவ இடத்துக்குச் சென்று அங்கிருந்தவர்களை மீட்க முடியும் எனத் தெரிகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அந்த மாநில முதல்வர் மோகன் யாதவ் தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.