பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவியிலிருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஆளுநர் இடையே பல்வேறு விவகாரங்கள் மோதல் போக்கு ஏற்பட்டது. கடந்தாண்டு ஆகஸ்டில் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்துவிடுவேன் என்றும், கடிதங்களுக்குப் பதில் அளிக்காவிட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். கடைசியாக முதல்வருக்கு அனுப்பிய செய்தியில், இதற்கு முன்பு அனுப்பப்பட்ட எந்தவொரு கடிதத்துக்கும் பதில் இல்லை என்றும், அரசியலமைப்பு நடைமுறை தோல்வியடைந்துவிட்டதாக குடியரசுத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் மீண்டும் ஒருமுறை எச்சரித்திருக்கிறார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் பகவந்த் மான், அமைதியை விரும்பும் பஞ்சாப் மக்களை ஆளுநர் அச்சுறுத்துகிறார் என்றும் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். மேலும், ஆளுநர் அனுப்பிய பெரும்பாலான கடிதங்களுக்குப் பதில் தரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியாக, தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகக் கூறி அவர் ராஜினாமா செய்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தில்லியில் சந்தித்த பிறகு பன்வாரிலால் புரோஹித்தின் ராஜினாமா முடிவு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகள் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், கடந்த 2021 செப்டம்பரில் பஞ்சாப் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார்.