பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே. அத்வானிக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகப் பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:
எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அத்வானியிடம் பேசி என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்வானி செய்த பங்களிப்பு மகத்தானது. சாதாரண தொண்டராகத் தொடங்கி, நமது நாட்டின் துணைப் பிரதமராக உயர்ந்தவர். உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்புத் துறை அமைச்சராகவும் சிறப்பாகப் பணியாற்றினார் என்று கூறியுள்ளார்.
நவம்பர் 8, 1927-ல் தற்போது பாகிஸ்தானில் இருக்கும் கராச்சியில் பிறந்தவர், எல்.கே. அத்வானி. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு அவருடைய குடும்பம் இந்தியாவுக்கு வந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைத்துக்கொண்ட அத்வானி, பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டார். 1980-ல் தொடங்கப்பட்ட பாஜகவின் தலைவராக நீண்ட காலம் அவர் பணியாற்றினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 1990-ல் ரத யாத்திரை நடத்தினார் அத்வானி. உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.