மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு ஒரு தொகுதியைக்கூட கொடுக்கமாட்டோம் என திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், அந்த மாநில முதல்வருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என மமதா பானர்ஜி ஏற்கெனவே அறிவித்திருந்தார். தனித்துப் போட்டியிட்டாலும் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், காங்கிரஸுக்கு ஒரு தொகுதியைக்கூட ஒதுக்கமாட்டேன் என மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
"மால்டாவில் இரு இடங்களை ஒதுக்குவதாக நாங்கள் முன்மொழிந்தோம். அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது மேற்கு வங்கத்தில் அவர்களுக்கு ஒரு இடம்கூட கிடைக்கப்போவதில்லை.
பாஜகவின் முதல் தரகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டால் நிறைய பாதிக்கப்பட்டுள்ளேன், அதை ஒருபோதும் மறக்கமாட்டேன். காங்கிரஸுடன் எனக்கு நல்ல உறவு இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினால் தான் காங்கிரஸுடனான எனது உறவு வீணானது" என்றார் மமதா.