அமலாக்கத்துறையின் கெடுபிடிகள் அதிகரித்து வந்த நிலையில் முதல்வர் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் விலகி, அவரது மனைவியான கல்பான சோரன் முதல்வராக பதவியேற்பார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. நேற்று சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய ஹேமந்த் சோரன், தன்னுடைய மனைவியை முதல்வராக்கும்படி முன்மொழிந்ததாக செய்திகள் வெளியாகின.
கல்பனா சோரன் முதல்வராக நியமிக்கப்பட்டாலும் அவரால் சட்டமன்ற உறுப்பினராக முடியாது. வேறு யாராவது எம்.எல்.ஏ. தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, அதில் கல்பனா சோரன் வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால், இன்னும் 10 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் இடைத்தேர்தல் வாய்ப்பு என்பது சாத்தியமில்லை.
இதற்கிடையே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆட்சியமைக்க உரிமை கோரி நாளை ஆளுநரை சம்பாய் சோரன் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இன்று மாலை ஜார்க்கண்ட் மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்னர் முதல்வர் பதவியிலிருந்து விலகியவர், ஆளுநரிடம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
ரூ. 600 கோடி நில மோசடி தொடர்பான வழக்கு அமலாக்கத்துறையால் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் ஹேமந்த் சோரன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கடந்த திங்கள் கிழமை அவரது டெல்லி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டார்கள். அதைத் தொடர்ந்து இன்று ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்தில் விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்