நூற்றாண்டுகளாக இருந்து வந்த விருப்பம் நனவாகி இருப்பதாக ராமர் கோயில் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
உரையில் குடியரசுத் தலைவர் கூறியதாவது:
"புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் எனது முதல் உரை இது. இந்த பிரமாண்ட கட்டடம் சிறந்த எதிர்காலத்துக்கான நம்பிக்கையின் தொடக்கம். ஒரே பாரதம் சிறந்த பாரதத்தின் அம்சமும் இதில் உள்ளது. ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற மரபுகளைக் கௌரவிப்பதற்கான உறுதித் தன்மை இருக்கிறது. இதுதவிர 21-ம் நூற்றாண்டின் புதிய இந்தியாவினுடைய புதிய மரபுகளைக் கட்டமைப்பதற்கான உறுதித் தன்மையும் உள்ளது. இந்தப் புதிய கட்டடத்தில் திட்டங்கள் குறித்து அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறும் என்கிற நம்பிக்கை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்த பணிகளின் நீட்சி தான் இன்று நாம் காணும் சாதனைகள்" என்றார்.
ராமர் கோயில் கட்டப்பட்டது குறித்தும் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். அவர் கூறுகையில், "பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பல்வேறு பணிகள் கடந்த 10 ஆண்டுகளில் நிறைவடைந்துள்ளன. ராமர் கோயிலைக் கட்ட வேண்டும் என்பது நூற்றாண்டுகளாக இருந்து வரும் விருப்பம். அது இன்று நனவாகி இருக்கிறது" என்றார்.