இண்டியா கூட்டணியில் எதையுமே செய்யவில்லை என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இண்டியா கூட்டணியை அமைப்பதில் முக்கியக் காரணமாக இருந்த நிதிஷ் குமார், அண்மையில் கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறினார். பிகார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிதிஷ் குமார், அன்றைய தினமே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவில் 9-வது முறையாக பிகார் முதல்வராகப் பதவியேற்றார்.
இண்டியா கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் விலகியதற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த நிலையில் பாட்னாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிகார் முதல்வர் நிதிஷ் குமார், இண்டியா கூட்டணியிலிருந்து விலகியதற்கான காரணத்தை விளக்கினார்.
"எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு வேறு பெயரைத் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால், இந்தப் பெயரை அவர்கள் ஏற்கெனவே இறுதி செய்துவிட்டார்கள். நான் கடுமையாக முயற்சித்தேன். இருந்தபோதிலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இன்று வரை எந்தக் கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை அவர்கள் முடிவு செய்யவில்லை. இதனால்தான் நான் அவர்களிடமிருந்து விலகி, முன்பு எங்கு இருந்தேனோ அங்கேயே வந்துவிட்டேன். கடைசி வரை இதே கூட்டணியில்தான் இருப்பேன். பிகார் மக்களுக்காக நான் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன்" என்றார் நிதிஷ் குமார்.