தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் கைகோர்த்த நிதிஷ் குமார் மாலை 5 மணிக்கு பிகார் முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார்.
மெகா கூட்டணியை முறித்துக்கொண்டு பிகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர், காபந்து முதல்வராகத் தொடருமாறு நிதிஷ் குமாரைக் கேட்டுக்கொண்டார்.
ராஜினாமா கடிதத்துடன் புதிய அரசை அமைப்பதற்கான பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தையும் நிதிஷ் குமார் ஆளுநரிடம் சமர்ப்பித்தார். பிகாரில் ஆட்சியமைக்க உரிமை கோரியதன் மூலம் மாலை 5 மணிக்கு பிகார் முதல்வராக 9-வது முறையாகப் பதவியேற்கிறார் நிதிஷ் குமார். இவருடன் பாஜகவைச் சேர்ந்த சாம்ராத் சௌதரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்கிறார்கள்.
முன்னதாக, பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த பாஜக, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் இதர கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பதற்கான தீர்மானத்தை அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் நிறைவேற்றினார்கள்.